Skip to main content

தோற்றமும், மாற்றமும்

 


தோற்றமும், மாற்றமும்


குறிஞ்சிக் குளம், சின்னதோர் கிராமம், இருபுறமும் பக்கவாட்டில் வரிசையாக ஆறு தெருக்கள். இந்த சின்ன கிராமத்திலேதான் குடியிருந்தது செல்லமணியின் குடும்பம். 'ஏபுள்ள இன்னுமா எழும்பல நீ, எவ்வளவு நேரந்தான் படுத்து கிடப்ப, சீக்கிரத்தில எழும்பி வீட்டு வேலயைப் பாக்கப்புடாதா' என்று படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லமணியை தாய் பூந்தெழிலம்மை கூப்பிட, 'பொறேன்மா, கொஞ்சம் தூங்கிட்டு வர்ரேன், ரொம்ப தூக்கமா வருது' என்று தாயின் காதில் விழும்படியாகப் புலம்பினாள் செல்லமணி. 'வயது இருபது ஆயிற்று, வளர்ந்து ஆளாயிட்ட, புகுந்த வீட்டில போயி உன் மாமியாருகிட்ட இப்படி புலம்ப முடியுமா?' என்று தனக்குள்ளோ சொல்லிக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள் தாய் புந்தெழிலம்மை. 'நான் வடிச்சி கொட்டுற வீட்டுல நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல, நீ வடிச்சிக் கொட்டப்போற வீட்டுல உனக்கு உருப்படியா வாழத்தெரிஞ்சா போதும்' என்று தனக்கான கடமை என காலை வேலையை வீட்டில் தொடர்ந்தாள் தாய் பூந்தெழிலம்மை. 

நாட்கள் ஓட ஓட, சில வருடங்களும் கடந்தது, செல்லமணியின் தோற்றத்துடன் வயதும் 23 என வளர்ந்தது. குழந்தையாகவும்; மற்றும் பிள்ளையாகவும் பார்த்த செல்லமணியை, கொமராகவே (மணமுடிக்கும் வயதெய்தியப் பெண்) பார்க்கத் தொடங்கிய தாய் மற்றும் தந்தையின் கண்கள், அவள் குடியேற்றச் சரியான வீட்டையும், குடும்பமாகச் சரியான புருஷனையும் தேடத்தொடங்கின. 

அது ஒரு மாலை நேரம், வேலைகளை முடித்து கிராமம் முழுவதும் வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், செல்லமணியின் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம். யாரென்று பார்க்க, பூந்தெழிலம்மை கதவைத் திறந்தபோது, தனக்கு தெரிந்த  புதுமலை என்னும் ஊரிலிருந்து செல்லமணியின் தந்தைக்கு நெருக்கமான உறவினரான மணிமாறன் வாசலில் நிற்பதைக் கண்டதும், மகிழ்ச்சியில் வாங்க வாங்க என வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றாள் பூந்தெழிலம்மை. தேனீர் கொடுத்து, சாப்பாடு செய்யுறேன், சாப்பிட்டுட்டுத்தான் போகனும் என்ற பூந்தெழிலம்மையின் ஆசுவாசத்துக்கும் அன்புக்கும் அடிபணிந்து, சரி என்று சம்மதம் தெரிவித்தார் மணிமாறன். பூந்தெழிலம்மை ஒருபுறம் சமைத்துக்கொண்டிருக்க, வீட்டின் ஒரு மூலையில் மணிமாறனும், செல்லமணியின் தந்தை பூங்கொன்றனும் குசலம் விசாரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். 

வந்த விசயத்தைப் பேச நேரம் வரக் காத்திருந்த மணிமாறன் பூங்கொன்றனை நோக்கி, 'சாப்பிடுறதுக்கு முன்னாடி நான் வந்ததுக்கான சங்கதியைச் சொல்லனும்' என்று மெல்ல முணுமுணுத்தவராக, 'பாப்பாவுக்கு ஏதாவது வரன் பார்க்கிறீங்களா?' என்று செய்தியின் முதல் வரியை வாசிக்கத் தொடங்கினார். இதைக் கேட்ட செல்லமணியின் தந்தை பூங்கொன்றன், 'தேடிக்கிட்டுதான் இருக்கோம்; ஒத்த புள்ள, செல்லமா வளத்துட்டோம், எங்கயும் போயி கண்ணு கலங்கிட்டு நிக்கக்கூடாது' என்று மணமகனுக்கான விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு முன், மகளைக் குறித்த பாசத்தைத் தெரிவிக்க, பதுங்கிப் பதுங்கிப் பேசிய மணிமாறன், 'புதுமலையில இருக்கிற மல்லிகா மகன் பட்டணத்துல வேல பாக்கிறான்; நல்ல குணக்காரன், எந்த கெட்ட பழக்க வழக்கமும் இல்லாதவன், யார் கூடயும் ஒரு சண்ட சச்சரவுக்கும் போகாதவன்' என்று ஒரு வாலிபனை தனது வார்த்தைகளால் வர்ணித்துப் பேசியதோடு, அவனுக்கு ஏத்தாப்ல ஒரு புள்ள கிடைக்குமான்னு தேடிக்கிட்டிருக்கா மல்லிகா, உங்க மகள் செல்லமணியை ஏதோ ஒருத்தருடைய கலியாணத்துல மல்லிகாவும் மகனும் பார்த்தாகளாம். செல்லமணியின் பவ்யமும், தோற்றமும், அமைதியும், மற்றவருடனான பழகும் விதமும் அவர்களுக்கு ரொம்ப புடிச்சிபோச்சாம், ஒருபுறம் அவங்க உங்களுக்கு தூரத்துச் சொந்தம்தான், என்றாலும் நேரடியா கேட்டுட முடியாதுல்ல, அதனால என் வீட்டிக்கு வந்து அவங்க விருப்பத்தச் சொல்லி, நீங்க கொஞ்சம் கேட்டுச் சொல்லமுடியுமா? என்று சொல்ல, இவர்கள் பேசிக்கொள்ளும் அத்தனை வார்த்தைகளையும் அறைக் கதவின் மறுபுறத்தின் ஒட்ட நின்று ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள் மணமகளாகவிருக்கும் செல்லமணி. 

ஒருபுறம் திருமண ஆசையின் கனவு கதவுக்குப் பின்னே அவ்வப்போது வந்து செல்ல, கதவுக்கு பின்னால் கல்யாணமே நடக்கும் உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக செல்லமணியை இழுத்து இழுத்து ஊஞ்சலாட்டிக்கொண்டிருந்தது. அந்த சில நிமிடங்கள் கதவின் மறுபுறம் செல்லமணிக்கு மணமேடையாகவே மாறிப்போனது. என்றாலும், குறிஞ்சி குளம் கிராமத்தின் பெண்கள், கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை அதிகம் அப்பியாசப்படுத்துபவர்கள், அக்கிராமத்தின் ஆண்பிள்ளைகளானாலும் அல்லது பெண்பிள்ளைகளானாலும், தங்கள் இஷ்டத்திற்கு ஒருபோதும் தங்களை உட்படுத்திக்கொள்பவர்களல்ல. எந்த முடிவு என்றாலும், தந்தையின் வார்த்தையே முடிவாக இருக்கும் என்பதை செல்லமணியும் அறிந்திருந்தாள். 

செல்லமணியின் தந்தை பூங்கொன்றனும், புதுமலையிலிருந்து வந்திருந்த மணிமாறனும் பேசிக்கொண்டிருக்கும்போதே, 'சாப்பிட்டுட்டுப் பேசலாம், என்று இடைமறித்தாள் செல்லமணியின் தாய் பூந்தெழிலம்மை'. கதவின் மறுபுறம் நின்றுகொண்டு செய்திகள் அனைத்தையும் ஒட்டுக்கேட்டுக்கெர்ண்டிருந்த செல்லமணிக்கோ, அந்த சாப்பாட்டு நேரம் அப்போது இடைவேளையாகிப்போனது. வெட்டி வந்த வாழை இலையில், சூடாக சாதத்தை அள்ளி அள்ளிவைத்துப் பறிமாறினாள் செல்லமணியின் தாய் பூந்தெழிலம்மை. அறுத்துச் சமைத்த கோழிக்குழம்புடனும், தோட்டத்தில் கிடைத்த பசுங்காய்கறிகளால் சமைத்த அவியல் கூட்டுடனும் இன்னும் கொஞ்சம் என்று, ரசம் ஊற்றி, மோர் ஊற்றி இனிப்பும் கொடுத்து உபசரித்தாள் செல்லமணியின் தாய். 

விருந்தினரை உபசரித்ததும், 'செல்லமணி' என்று தாய் கூப்பிட, 'இதோ வந்துட்டேன் மா' என மௌமான பதிலோடு தாயிருக்கும் அறை நோக்கி செல்லமணி செல்ல, மகளை அருகில் அமர்த்திக்கொண்டு, தானும் உணவு உண்ணத்தொடங்கினாள் செல்லமணியின் தாய். 

கொஞ்சம் ஓய்வு எடுக்கிறீகளா? என்று செல்லமணியின் தந்தை கேட்க, இன்னும் கொஞ்ச நேரந்தான, இருக்கட்டும், பரவாயில்ல, உங்க பதில கேட்டுட்டு உடனே கிளம்பனும் என்று மணிமாறன் தனது வருகைக்கான முடிவு வரிகளை எழுத, இந்த வந்திர்ரேன், என்று சொல்லியவாறு, 'ஏபுள்ள' என்று தனது மனைவியும் செல்லமணியின் தாயுமான பூந்தெழிலம்மையை அழைத்தார் செல்லமணியின் தந்தை பூங்கொன்றன். 'என்னங்க?' என்ற ஒற்றைச் சொல்லுடன், வந்த மனைவியை, வீட்டில் ஓரமாக ஒரு இடத்திற்கு கூப்பிட்டுச் சென்று, விசயத்தைச் சொல்ல, இருவரின் ஒப்புதலோடு பதில் ஒன்றானது. 

முடிவு வரிகளை எழுத, மணிமாறனுக்கு முன் வந்து நின்றார் செல்லமணியின் தந்தை பூங்கொன்றன். 'மாப்பிள்ளையப் பத்தி நீங்க சொன்னீங்க, நாங்களும் பாத்திருக்கோம், கேள்விப்பட்டிருக்கோம், எங்கள் சம்மதத்தை தெரிவித்துவிடுங்கள்' என்ற வார்த்தை செல்லமணியின் தந்தையின் வாயிலிருந்து வந்ததைத் தொடர்ந்து புதுமலைக்கு புறப்பட்டார் மணிமாறன். அதுவரை, விருந்தினரின் வார்த்தைகளை கதவின் மறுபுறத்தில் நின்று கேட்டு கேட்டுக்கொண்டிருந்த செல்லமணியோ விடை எழுதப்படும் நேரத்தில் விருந்துண்டுகொண்டிருந்தாள். அச்சமையம், செல்லமணி சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்ட மணிமாறன், 'நல்லாயிருக்கியாம்மா? போயிட்டு வர்ரேன்' என்ற இரண்டு வார்த்தைகளோடு விடைபெற்றார். 

விருந்தினர் வீட்டை விட்டுச் சென்றதும், அவர் எழுதிய விடையை அறியக் காத்திருந்தாள் மகள் செல்லமணி. அவ்வாறே, விருந்தினருக்கு விடைகொடுத்ததும், மகள் செல்வமணியின் வாய்ப்பிறப்பை அறியக் காத்திருந்தனர் செல்வமணியின் தந்தையும் தாயும். பெற்றோரின் வாய்மொழியினால், தனக்கு வாழ்க்கை பிறக்கவிருப்பதை அறிந்துகொண்டதோடு, 'உங்கள் விருப்பம்' என்று பதிலாக இசைவும் தெரிவித்தாள். 

மங்கள நாள் அது, செல்வமணியின் இல்லற வாழ்க்கை இனிதே தொடங்கியது. பெற்றெடுத்த மகளை, இன்னொரு வீட்டில் விட்டுவிட்டு வரும் தருணம் அது, செல்வமணியின் தாய் மற்றும் தந்தையின் நெஞ்சில் வலி மிகுந்திருந்தாலும், பெண்பிள்ளை அவளுக்கு வழி  அதுதான் என்பதை அறிந்தவர்களாக, அவளை அணைத்து தங்கள் கண்ணீரை ஆனந்தமாக மாற்றிக்கொண்டனர். 

நாட்கள் கடந்தன, ஆறு மாதங்கள் உருண்டோடியிருந்தன. பிறந்த வீட்டிலிருந்த மகள் புகுந்த வீட்டில் எப்படி இருப்பாளோ! என்ற என்ற எண்ணத்துடன், மகளை பார்க்க விரும்பிய தாயின் விருப்பத்திற்கு இணங்க, செல்வமணியின் தந்தை தன் மனைவியை செல்வமணியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். காலையில் எழுவாளா? மாமியாருக்கு உதவி செய்வாளா? வீட்டில் வேலை செய்கின்றாளா? இன்னும் எத்தனையோ கேள்விகள் ஒருபுறம் செல்வமணியின் தாயைத் துளைத்தெடுத்துக்கொண்டிருக்க, கணவனோடு செல்வமணியின் வீடு இருக்கும் புதுமலைக்கு விரைந்தாள். சம்மந்தாரின் வீட்டில் காலடி எடுத்துவைத்ததும், வெளியே வந்த செல்வமணியின் மாமியார் வாங்க வாங்க என்று செல்வமணியின் பெற்றோரை வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றார். மகளைக் குறித்து எதுவும் புகாராகச் சொல்லுவார்களோ என்று பயந்துகொண்டிருந்த, செல்வமணியின் தாய்க்கு அதிர்ச்சி. செல்வமணியின் தாய்க்கு தேநீர் கொடுத்து, அருகிலே வந்தமர்ந்த செல்வமணியின் மாமியார், 'உங்க புள்ள எங்க வீட்டுக்கு வந்தது, எங்களுக்கு இன்னொரு புள்ள புறந்தது போல இருக்கு.' பொம்பள புள்ள இல்லாத எங்க ஊட்டுல பொன்னா அவ எல்லாத்தையும் பாத்துக்கறா, நாங்க எழுவதற்கு முன் எழுந்து எங்களுக்கு தேநீர் கொடுத்து, சமையல் அனைத்தையும் முடித்து, சாப்பிட அவள் அழைக்கும் குரலைத்தான் அனுதினமும் கேட்கிறோம். சின்ன சின்ன உதவிகளையே எங்கள் வீட்டில் இப்போது செய்கிறோம் நாங்கள் என்று அவர்கள் சொன்னபோது, செல்வமணியின் தாயின் கண்கள் நீரில் குளித்தன. பிறந்த வீட்டின் வாழக்கையையும், புகுந்த வீட்டின் வாழ்க்கையையும் புரிந்துகொண்ட அவளை நினைத்து ஆனந்தத்துடன் வீடு திரும்பினர் செல்வமணியின் பெற்றோர். 

தோற்றம் எங்கே எப்படி நடந்திருந்தாலும், மாற்றத்தைப் புரிந்துகொண்டதினால் செல்வமணியின் வாழ்க்கை மகிழ்ச்சியாயிருந்தது. 

  


Comments

Popular posts from this blog

விஷம்

 சிறுகதை www.sinegithan.in இரவு நேரம் குடத்தில இருந்த தண்ணிய கொஞ்சம் சின்ன பாத்திரத்தில சரிச்சி, அணைஞ்சிபோன அடுப்புக்கு மேலே இருந்த சோத்துப் பானையில எஞ்சியிருந்த சோத்துக்குள்ள கொஞ்சமா ஊத்தி, கையால சோத்த தண்ணியோடக் கரச்சி கஞ்சியாக்கிக் குடிச்சிப்புட்டு, ஒண்டிக்கட்டையா தான் வாழும் பனை ஓலை குடில் போன்ற மண்கட்டு வீட்டில, வலக்கையை மடக்கி முடக்கி தலையணையா வச்சிக்கிட்டு, வாழ்ந்த நாள் நினைவுகள் அவ்வப்போது வந்துபோக, முடிந்துபோன தாரத்தின் நாட்கள் முன்னுக்கு வந்து நிற்க, பெற்றெடுத்தப் பிள்ளைகள் தூரத்தில் வாழ்ந்திருக்க அத்தனையையும் நினைத்துக்கொண்டிருந்த முதியவரை தன் மடியில் அள்ளி அணைத்திருந்தது தூக்கம்.   இரவு தன்னை ஆழப்படுத்திக்கொண்டே செல்லச் செல்ல, நள்ளிரவின் உச்சத்தில், எள்ளளவும் தன்நினைவின்றி உலகத்திற்கும் உடலுக்கும் தொடர்பேதுமில்லாதவரைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென செவிகளில் 'டொம் டொம் டொம்' என்று ஒன்றன் பின் ஒன்றாய்ப் பாத்திரங்கள் வரிசையாகச் சரிந்துவிழுந்துகொண்டேயிருக்கும் சத்தங்கள் கேட்க, சவம்போல் கிடந்த அவர் சட்டென எழுந்து, தன் வீட்டின் அடுப்பங்கறைக்குச் சென்று அங்கும

வசனம் வீணாவதில்லை

 வசனம் வீணாவதில்லை www.sinegithan.in கல்லூரி வகுப்புகள் முடிந்ததும், விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தான் ராகுல்; வீட்டை விட்டு தூரமாயிருந்ததால், வீட்டின் நினைவுகள் அவ்வப்போது அவனை வாட்டியெடுத்தன. ஒருபுறம் வீட்டில் வியாதிப்படுக்கையில் இருக்கும் தாய், மற்றொருபுறம் குடித்துவிட்டு குடும்பத்தினைக் குறித்து கவலையற்று வாழும் தந்தை. வறுமையின் நிமித்தம் உறவினர்களும் தனக்குத் தூரமாயிருக்கும் சூழ்நிலை. நண்பர்களது உதவியுடன் கல்லூரிப் படிப்பினை தொடர்ந்துகொண்டிருந்தான். எனினும், மற்ற மாணவர்களுக்குக் கிடைத்த வாழ்க்;கை, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம், அவ்வப்போது அவனை 'நீ ஏழை' என்பதை நிறுத்துச் சொல்லிக்கொண்டிந்ததால், 'வாழ்ந்தெதற்கு?' என்ற கேள்வியும் இடையிடையே இதயத்தில் வந்துபோனது. வருத்தங்களை நினைத்து, நினைத்து வீட்டிற்கு வந்துபோவதையும் தவிர்த்துவந்தான் ராகுல். கல்லூரியின் கடைசி ஆண்டு, வீட்டைக்கூட காணாதபடி கண்களை மூடிக்கொண்டு, படிப்பிலேயே மூழ்கியிருந்தான் ராகுல்.  மூன்று ஆண்டுகளுக்குப் பின், காலம் ஒருவழியாக கல்லூரி வளாகத்திலிருந்து தன்னை வெளியேற்ற, வீடு வந்து சேர்ந்தான் ராகுல