Skip to main content

நிஜமாகாத நிழல்

 

நிஜமாகாத நிழல்

 www.sinegithan.in

                                                                             


 

அப்பா அன்று திட்டிய வார்த்தையினை ரவியினால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அப்போது அவனுக்கு பதினேழு வயதுதான் என்றபோதிலும், தான் செய்த ஒரு சிறிய தவறுதலுக்காக இப்படி தன்னை தனது நண்பர்கள் அறிய அத்தனை உரத்தக் குரலில் ஊரறிய தந்தை உறுமிக்கொண்டிருக்கிறாரே என ரவி பொறுமிக்கொண்டிருந்தான். ஆற்றிற்குச் சென்று குளிக்கக்கூடாது என்ற அப்பாவின் கட்டளையினை மீறியதால் வந்த விளைவினை தண்டணையாக அனுபவித்துக்கொண்டிருந்தான் ரவி. ஒரு புறம் தந்தை அடிக்கும் அடிகளைச் சகித்துக்கொண்டிருக்க அவனுக்கு பெலனிருந்தபோதிலும், அதனை நண்பர்கள் பார்க்கின்றதை அவனால் சகிக்க முடியவில்லை. உடன் பிறந்த சகோதரர்களும் அப்பாவின் கைக்குத் தன்னைத் தப்புவிக்காமல், தன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனரே என்ற வெறுப்பும் அவனுக்குள் நெருப்பாய் கிளம்பியது. அப்போது ஓடிவந்தாள் அவனது மூத்த தமக்கை, 'போதும் விடுங்க, ஏதோ ஒரு நாள் தெரியாம ஆத்துல குளிக்கப் போயிட்டான், இனிம போக மாட்டான்' என்று அப்பாவிடம் அவள் பேசியபோது சற்று அடங்கியது அவன் கோபக் கனல். 

அப்பாவிற்குப் பயந்து தண்டனையை அனுபவித்துக்கொண்டு வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருந்த ரவியின் மனது சிறகடித்து தன்னோடு சேர்ந்து ஆற்றிற்கு வந்த நண்பர்களின் வீட்டிற்குப் பயணமானது. அவனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு நண்பனும் இவனோடு சேர்ந்து அதே ஆற்றில் குளித்தவன், என்றபோதிலும் அவனது தந்தை அவனைத் தண்டிக்காததைக் கண்டு இடிந்துபோயிருந்தான் ரவி. ஏன் எனது தந்தை மட்டும் என்னைத் தண்டிக்கின்றார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் திணறிக்கொண்டிருந்தது அவனது மூளை. நான் அந்தக் குடும்பத்தில் மகனாகப் பிறந்திருந்தால் எத்தனை நலமாக இருந்திருக்கும் என நிஜமாகாத நிழலைக் கனவாகக் கண்டு நொந்துகொண்டிருந்தான் ரவி. ஒரு குற்றம் செய்ததற்காக, தான் முன்னே செய்த எத்தனையோ குற்றங்களை ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தி தந்தை எரிந்து விழுவதைக் கண்டு ரவியின் மனது முறிந்துகொண்டிருந்தது. குடும்பத்தின் மேல் கோபமுற்று வெளிNயினால் மட்டுமே விடுதலை என்ற முடிவினை எடுத்தான் ரவி. 

அது ஒரு மாலை நேரம், தனது தெருவில் ஆலய மணி ஒலித்துக்கொண்டிருந்தது, ரவியின் தாய் மாலை ஆராதனைக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். 'கோயிலுக்கு வரலியா?' என்ற தாயின் கேள்விக்கு 'போம்மா வாரேன்' என்று சாதுரியமாகப் பதில் பேசி தப்பிக்கொண்ட ரவி, அந்த நேரத்தில் வீட்டிற்கு விடைகொடுத்துவிட்டு பயணமானான். எப்படியோ கையில் கிடைத்த காசு கொஞ்சம், அதனை ஒரு துணிப்பையில் பத்திரமாய் பொதிந்து வைத்துக்கொண்டு வெளியேறினான் வீட்டைவிட்டு. வழியில் அவனைக் கண்ட முதியவர் ஒருவர், அவனிடம் 'தம்பி எங்க போற, வீட்ல சொல்லிட்டுத்தான் போறியா?' என குறுக்கிட்டபோது, சினம் வந்தபோதிலும் சிரித்து மழுப்பிக்கொண்டு பேருந்து நிலயத்தை அடைந்தான் ரவி. எங்கு போவது? என்ன செய்வது? என அறியாமல் வெறுமையாய் இருந்தது ரவியின் மனது. எதை எதையோ நினைத்துக்கொண்டு இரவு பேருந்து நிலையத்தை அடைந்த ரவி; அங்கும் என்ன செய்வது என அறியாதவனாய் தொடர்ந்து பயணிக்க விரும்பி, எப்படியோ ஒரு சுற்றுலா ஸ்தலத்தைச் சென்றடைந்தான். இரவு நேரம், குளிர் ஒருபுறம், எங்கு தங்குவது, யார் துணை என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காதவனாக உறக்கத்தில் உலாத்திக்கொண்டிருந்த அவனது மனது அமைதியை இழந்தது. உடலில் உதறல், உள்ளத்தில் உளரல்; இனி மீண்டும் வீட்டுக்குப் போகனுமா? என்று அவனே தன் மனதில் கேட்டுக்கொண்டு 'வேண்டாம்' என பதிலும் சொல்லிக்கொண்டான். 

அப்படி என்றால் என்ன செய்வது என தன்னிடமே அவன் கேட்டக் கேள்விக்கு, 'தற்கொலை செய்துகொள்' என்ற பதிலையே அவனது மனது ரீங்கரித்துக்கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த துணிப்பையினை அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தொங்கவிட்டுவிட்டு, தற்கொலைக்கு ஆயத்தமானான் ரவி. தகப்பன் தனக்குக் கொடுத்த சிறிய தண்டணைக்காக, தனக்குத் தானே இத்தனை பெரிய தண்டணையை கொடுக்கவேண்டுமா என்பதையெல்லாம் நினைக்க அவன்கு கணங்கள் இல்லை. தூக்கு மேடை கைதியைப் போலை தன்னையே அதில் ஏற்றிக்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டு, துக்கத்தோடு இருந்த ரவியை தூக்கம் தாலாட்டி தூங்கவைத்தது, தன்னையும் அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான் ரவி. காலை 7 மணி; சூரியக் கதிர் தன் மேல் பட எழுந்துகொண்ட அவன் திடுக்கிட்டான்; 'நான் சாகனும் என்றுதானே வந்தேன், எப்படி தூங்கினேன்' என்று விழித்த அவனது கண்களுக்கு முன்னால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் பட்டது. உல்லாசமாய், ஜோடியாய், குடும்பமாய், குழந்தைகளுடன் வந்த மக்களைக் கண்ட ரவி தனிமையை உணர்ந்தான். தனது தவற்றினை உணர்ந்து, வீட்டை நோக்கிப் பயணமானான் ரவி; வழியில் பழங்கால ஆலயம் ஒன்றின் படியில் அவனது கால்கள் முழங்காலிட்டது. மனம் இறைவனை நோக்கிப் பார்த்தது, மௌனம் சற்று நேரம் நீடித்தது, அவனது வாழ்க்கையின் கருமேகங்களெல்லாம் கண்ணீராய் பொழிந்துகொண்டிருந்தது. ஆனால் அவனது மனதோ அமைதி அடைந்தது. பூட்டிய ஆலயத்தின் வெளியே நின்றிருந்தாலும் ரவியின் மனதிற்குள் இறைவன் நுழைந்திருந்தார். ரவி தற்கொலை செய்துகொள்ளவில்லை ஆனால், இறைவனின் சந்நிதியில் தன்னைக் கொலை செய்திருந்தான். அன்று அவனுக்குப் பிறந்த நாள். சாவு அவனுக்கு நிஜமாகாமல் நிழலானது. தன்னைக் காப்பாற்றியது இயற்கையான தூக்கமல்ல இறைவன் என்பதை உணர்ந்த அவனது வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசமானது. 

இடிந்து போனதற்காக இடித்துக்கொள்வதும்

அடிக்கப்பட்டதற்காக அழித்துக்கொள்வதும்

துக்கத்தை மறக்கத் தூக்கில் தொங்குவதும்

கண்ணீருக்கு விடையாய் கல்லறையை நினைப்பதும் ஏன்? 

வல்லவரை நினைத்து வா! அவர் வாழவைப்பார். 

Comments

Popular posts from this blog

விஷம்

 சிறுகதை www.sinegithan.in இரவு நேரம் குடத்தில இருந்த தண்ணிய கொஞ்சம் சின்ன பாத்திரத்தில சரிச்சி, அணைஞ்சிபோன அடுப்புக்கு மேலே இருந்த சோத்துப் பானையில எஞ்சியிருந்த சோத்துக்குள்ள கொஞ்சமா ஊத்தி, கையால சோத்த தண்ணியோடக் கரச்சி கஞ்சியாக்கிக் குடிச்சிப்புட்டு, ஒண்டிக்கட்டையா தான் வாழும் பனை ஓலை குடில் போன்ற மண்கட்டு வீட்டில, வலக்கையை மடக்கி முடக்கி தலையணையா வச்சிக்கிட்டு, வாழ்ந்த நாள் நினைவுகள் அவ்வப்போது வந்துபோக, முடிந்துபோன தாரத்தின் நாட்கள் முன்னுக்கு வந்து நிற்க, பெற்றெடுத்தப் பிள்ளைகள் தூரத்தில் வாழ்ந்திருக்க அத்தனையையும் நினைத்துக்கொண்டிருந்த முதியவரை தன் மடியில் அள்ளி அணைத்திருந்தது தூக்கம்.   இரவு தன்னை ஆழப்படுத்திக்கொண்டே செல்லச் செல்ல, நள்ளிரவின் உச்சத்தில், எள்ளளவும் தன்நினைவின்றி உலகத்திற்கும் உடலுக்கும் தொடர்பேதுமில்லாதவரைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென செவிகளில் 'டொம் டொம் டொம்' என்று ஒன்றன் பின் ஒன்றாய்ப் பாத்திரங்கள் வரிசையாகச் சரிந்துவிழுந்துகொண்டேயிருக்கும் சத்தங்கள் கேட்க, சவம்போல் கிடந்த அவர் சட்டென எழுந்து, தன் வீட்டின் அடுப்பங்கறைக்குச் சென்று அங்கும

தோற்றமும், மாற்றமும்

  தோற்றமும், மாற்றமும் குறிஞ்சிக் குளம், சின்னதோர் கிராமம், இருபுறமும் பக்கவாட்டில் வரிசையாக ஆறு தெருக்கள். இந்த சின்ன கிராமத்திலேதான் குடியிருந்தது செல்லமணியின் குடும்பம். 'ஏபுள்ள இன்னுமா எழும்பல நீ, எவ்வளவு நேரந்தான் படுத்து கிடப்ப, சீக்கிரத்தில எழும்பி வீட்டு வேலயைப் பாக்கப்புடாதா' என்று படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லமணியை தாய் பூந்தெழிலம்மை கூப்பிட, 'பொறேன்மா, கொஞ்சம் தூங்கிட்டு வர்ரேன், ரொம்ப தூக்கமா வருது' என்று தாயின் காதில் விழும்படியாகப் புலம்பினாள் செல்லமணி. 'வயது இருபது ஆயிற்று, வளர்ந்து ஆளாயிட்ட, புகுந்த வீட்டில போயி உன் மாமியாருகிட்ட இப்படி புலம்ப முடியுமா?' என்று தனக்குள்ளோ சொல்லிக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள் தாய் புந்தெழிலம்மை. 'நான் வடிச்சி கொட்டுற வீட்டுல நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல, நீ வடிச்சிக் கொட்டப்போற வீட்டுல உனக்கு உருப்படியா வாழத்தெரிஞ்சா போதும்' என்று தனக்கான கடமை என காலை வேலையை வீட்டில் தொடர்ந்தாள் தாய் பூந்தெழிலம்மை.  நாட்கள் ஓட ஓட, சில வருடங்களும் கடந்தது, செல்லமணியின் தோற்றத்துடன் வயதும் 23 என வளர்ந

வசனம் வீணாவதில்லை

 வசனம் வீணாவதில்லை www.sinegithan.in கல்லூரி வகுப்புகள் முடிந்ததும், விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தான் ராகுல்; வீட்டை விட்டு தூரமாயிருந்ததால், வீட்டின் நினைவுகள் அவ்வப்போது அவனை வாட்டியெடுத்தன. ஒருபுறம் வீட்டில் வியாதிப்படுக்கையில் இருக்கும் தாய், மற்றொருபுறம் குடித்துவிட்டு குடும்பத்தினைக் குறித்து கவலையற்று வாழும் தந்தை. வறுமையின் நிமித்தம் உறவினர்களும் தனக்குத் தூரமாயிருக்கும் சூழ்நிலை. நண்பர்களது உதவியுடன் கல்லூரிப் படிப்பினை தொடர்ந்துகொண்டிருந்தான். எனினும், மற்ற மாணவர்களுக்குக் கிடைத்த வாழ்க்;கை, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம், அவ்வப்போது அவனை 'நீ ஏழை' என்பதை நிறுத்துச் சொல்லிக்கொண்டிந்ததால், 'வாழ்ந்தெதற்கு?' என்ற கேள்வியும் இடையிடையே இதயத்தில் வந்துபோனது. வருத்தங்களை நினைத்து, நினைத்து வீட்டிற்கு வந்துபோவதையும் தவிர்த்துவந்தான் ராகுல். கல்லூரியின் கடைசி ஆண்டு, வீட்டைக்கூட காணாதபடி கண்களை மூடிக்கொண்டு, படிப்பிலேயே மூழ்கியிருந்தான் ராகுல்.  மூன்று ஆண்டுகளுக்குப் பின், காலம் ஒருவழியாக கல்லூரி வளாகத்திலிருந்து தன்னை வெளியேற்ற, வீடு வந்து சேர்ந்தான் ராகுல